வியாழன், 17 ஆகஸ்ட், 2017

கலியின் ஆரம்பம் (மகாபாரத பதிவு)

கலியின் ஆரம்பம்
(மகாபாரத பதிவு)
          பஞ்சபாண்டவா்களில் ஒருவரான சகாதேவன் சந்தைக்குள் நுழைந்தான் அழகான குதிரையை பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, குதிரை என்ன விலை? என்று கேட்டான் குதிரையின் உரிமையாளரோ, “ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல, நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினால் குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்” என்றார் சகாதேவன் உடனே, “சரி கேள்வியைச் சொல்லுங்கள்” என்றார்.
          குதிரையின் உரிமையாளர் “நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் கூறுங்கள்
          ஒரு பெரிய கிணறு அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய  கிணறுகளை நிரப்பலாம் ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து.  மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.  இது ஏன்? நன்றாக யோசித்து பதில் கூறுங்கள்” என்றார்.  சகாதேவனால்  பதில் கூற முடியவில்லை அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.
          சற்று நேரத்தில்......... சகாதேவனை தேடிக் கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான்.   அவணும் குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்
          குதிரையின் உரிமையாளா், நகுலனிடம் ஒரு ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.  நீங்கள் பதில் கூறிவிட்டு குதிரையை இலவசமாகவே பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
          துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து அடுத்த பக்கம் போய்விட்டது.  ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையில் வழியாகப் போக முடியவில்லை.  ஏன்? என்றார்.  நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை.  ஆவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சகாதேவனுடன் சோ்ந்து உட்கார்ந்துவிட்டான்.
          அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜீனனும் அங்கு வந்தான்.  அவனும், குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய்விலை கேட்டான் குதிரையின் உரிமையாளர் அர்ஜீனனிடமும் கேள்வி கேட்டார்.
          “ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது.  அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.  ஆனால் அறுவடை காலத்தில் அந்த வயல் காட்டில் எதுவும் இல்லை வேலியெல்லாம் அப்படியே இருந்தது அப்படி இருந்தும்   விளைந்த தானியங்கள் எல்லாம் யார் எடுத்தார்கள்? பதில் கூறிவிட்டு, குதிரையை அழைத்துச் செல்லுங்கள் என்றார்.  அர்ஜீனனால் பதில் கூற முடியவில்லை அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
          சகோதர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க அரண்மனையில் அவா்களைக் காணாமல், தர்மர் திகைத்தார் பீமனைக் கூப்பிட்டு, “தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை நீ போய், அவா்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா! என்றார்.
          பீமனும் போய்  தேடிப்பிடித்து மூவரையும் அழைத்து வந்தான் அரியணையில் அமர்ந்திருந்த தர்மா் அவா்களைப் பார்த்தும் அர்ஜீனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை.  எங்கே போய் இருந்தீர்கள்? எனக் கேட்டார்.  அதற்கு அர்ஜீணன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட கேள்விகளையும் கூறினான்.  அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார் அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.  “அண்ணா! நீங்கள் நடுங்கும் படியாக என்ன நடத்தது?  எனக் கேட்டார்கள்.
          தர்மர் பதில் சொல்லத்தொடங்கினார் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதங்களை அம்மூன்று கேள்விகளும் குறிப்பிடுகின்றது. என விரிவாகக் கூறத் தொடங்கினார்
          உங்களிடம் கேள்வி கேட்டவன் கலிபுருஷன் அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்.  ஏழு சிறிய கிணறு என்பது அவா்களது பிள்ளைகள்.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவா்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள் இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறய கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது.  ஆனால் அந்த பிள்ளைகளோ அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்களை பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள் இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.
          இரண்டாவது கேள்விப்படி இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும் ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும் இதைத்தான் யானை போன  வழியல் அதன் வால் போக முடியவில்லை என்றார்.
          மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களையும் பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக்  குறிக்கும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவா்களை அழித்துவிடுவார்கள்.  மக்கள் தான் வறுமையில் வாடுவார்களே தவிர அதிகாரிகள் செழிப்பாகத் தான் இருப்பார்கள் இதைத்தான் வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது எனக் கூறி முடித்தார் தர்மர்.

-வ.மீனாட்சி

2 கருத்துகள்:

  1. மஹாபாரதத் கிளைக்கதைகளில் கொட்டிக் கிடக்கும் பொக்கிஷங்களுக்கு நிகராக இராமாயணத்தில் கூட இல்லையெனச் சொல்லலாம்.

    ஒரு தனி மனிதன் எவ்வாறு ஒழுக்கமுடன் இருக்கவேண்டும் என்பதையும், அவன் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி, மனிதப் பிறவி எடுத்துவிட்டால், இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்குத் தகுந்த உதாரணங்கள் இராமாயணத்தில் உண்டு..

    மாபாரத்தில் ஒரு அரசன் எப்படி ஆட்சி செய்யவேண்டும், யார் சொல்வதைக் கேட்கவேண்டும், தன்னிட்ம் இருக்கும் மந்திரிகள் எவ்வாறு செயல் படுகின்றனர், நாட்டில் ஒரு பிரச்சினை வந்தால் அதை எப்படி சமாளிப்பது, மக்களின் நலனில் எப்படி அக்கரை செலுத்துவது என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் பஞ்ச தந்திரக் கதைகளும், மஹாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றியும் அன்றாடம் நாம் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.

    பல இடங்களில் ஜோடனை செய்தது போல, ஏதோ கட்டுக் கதை விடுவது போலத் தோன்றினாலும், இதன் கருத்தாழத்தைப் புரிந்து கொள்ள முயற்ச்சிப்பவர்களுக்கு மிகுந்த ஞானத்தைக் கொடுக்கும்.

    இப்போதெல்லாம் இதைப் பற்றி எளிதாக, எதையும் தேடாமல் படிக்க, புலனத்தில் பதிவேற்றப் பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    ஆனால் ஒரு வருத்தமான விஷயம் என்ன வென்றால் இதை புலனத்தில் அனுப்பும்போது, எழுதியவர் பெயரை மறைத்து தலையையும் வாலையும் வெட்டி ஒட்டி அனுப்பும்போது தான் வருத்தமாகிறது. கஷ்டப்பட்டு ஒருவர் எழுதியதை அப்படியே அனுப்பினால் என்ன..? அதை ஏன் வெட்டி ஒட்டவேண்டும் என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியே..?

    இந்த தளத்தில், மஹாபாரத தத்துவ கிளைக்கதையை பதிவேற்றிய வ. மீனாட்ச்சி அவர்களுக்கு என் அகமகிழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கருத்துப் பதிவை வெளியிடவும்..பெருவை பார்த்தசாரதி

    பதிலளிநீக்கு