செவ்வாய், 14 மார்ச், 2017

பழந்தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல்


முன்னுரை

            விருந்தினா் என்பவா் இக்காலத்தார் கருதுவது போல, உற்ற உறவினா் அல்லா்.  எதிர்பாராமல் பசியால் இல்லம் நோக்கி வருபவரே விருந்தினா் ஆவார். இவா்கள் பழங்காலத்தில் சிறப்பாக உபசரிக்கப்பட்டனா் எனவும் இவா்களுக்கென தனிச்சிறப்பிடம் உண்டு எனவும் பழந்தமிழ் இலக்கியங்கள் சித்தரிக்கின்றன.  பழந்தமிழா்களின் விருந்தோம்பல் பண்புகள் பற்றி ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

            விருந்தினா்க்கெனத் தனியாகச் சிறந்த உணவுகள் தயாரிக்கப்பட்டன.  திணையரிசியும் பாலம் கலந்த பால்சோறு, அவரைப் பருப்பும் அரிசியும் கலந்த பருப்புச்சோறு, இறைச்சியும் அரிசியும் கலந்த “ஊன்துவை அடிசில்” புளியும் மோரும் மூங்கில் அரிசியோடு கலந்து ஆக்கப்பட்ட “புளியங்கூழ்“ ஆகியன சங்ககால உணவு வகைகளுள் குறிப்பிடத்தக்கவை  அரிசிக்களி, அரிசிக் கூழ், அரிசிச் சோறு, அரிசி அவல், அரிசிக்கள் ஆகியன அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்டன.  ஊன் உணவுடம் கள்ளும் இனவேறுபாடின்றி அனைவராலும் உண்ணப்பட்டன.
            உணவில் கள் முதலிடம் பெற்றது கடும் புளிப்புடன் கூடிய கள்  விரும்பி உண்ணப்பட்டது இக்கள்,

            ”தேட்கடுப்பன்ன நாட்படு தேறல்” (புறநா-392)
          ”பாம்பு வெகுண்டன்ன தேறல்” (சிறுபாண் - 237)

எனப் புகழப்படுகிறது.  அரசன் தெளிந்த கள்ளைத் தானுண்டு விட்டுக் கலங்கிய கள்ளை மறவா்க்கும் விருந்தினா்க்கும் அளித்தான்.  மன்னன் மறவரையும் விருந்தினரையும் பாராட்டும் பாணியாக இது விளங்குகிறது கள், உணவு ஆகியவற்றைப் பொற்காலத்தில் அளிப்பது விருந்தினரைப் பேணும் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது.

            தன்னை நாடி வந்த விருந்தினரை நன்கு உபசரித்தான் பல்யானை செல்கெழுகுட்டுவன் வந்த விருந்தினா் இடம் பெயர்ந்து செல்லாமல் இருக்க உண்ண உணவும், ஆட்டிறைச்சியும் கொடுத்தான் ஆட்டிறைச்சி விற்போர் கொத்திச் சிதைத்த கொழுப்பு மிக்க இறைச்சியை வாணிலியில் இட்டுப் பொரிக்கும் போதெல்லாம் கடல்  ஒலிபோல் ஓசையுடன்  கூடிய கருமையான அடிசில் நெய்யாகிய அவதிப்புகை எழும் இதனைப்,

            ”வருநா் வரையார் வார வேண்டி
          விருந்துகண் மாறாது உண் இய பாசவா்
          ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங்குறை
          குய்இடு தோறும் ஆனாது ஆா்ப்பக்
           கடல் ஒலி கொண்டு, செழுநகா் வரைப்பின்
          நடுவன் எழுந்த அடுநெய் அவுதி” (பதிற்-8-14)

எனப் பதிற்றுப்பத்து கூறுகிறது அதவாவது, வந்து விருந்தினா்க்கு காலம் நேரம் பார்க்காமல் எந்நேரமும் விருந்தோம்பல் செய்யப்பட்டது.  எனவும் அதனால் தான் குட்டுவன் அரண்மனையில் எப்போது  பார்த்தாலும் அவுதிப்புகை எழுகின்றன என்ற கருத்தும் புலப்படுகிறது.

            பத்துப்பாட்டில் அமைந்த ஆற்றுப்படை இலக்கியங்கள் விருந்தோம்பும் பான்மையை விரிவாக விளக்கி நிற்கின்றன.  மன்னா் விருந்தினரை வரவேற்று நின்ற பார்வை, புனிற்றா கன்றை நோக்கும் பார்வையுடன் ஒப்பிடப்படுகிறது.  கண்ணால் பருகுவோர்போல் ஆர்வம் கொண்டு வரவேற்று, “ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டும் உள்ளத்தை அவா்கள் பெற்றிருந்தனா் விருந்தினா்களின் பல் மழுங்குமாறு உணவுகள் வழங்கப்பட்டன அவா்களது பாசிவோர் போன்ற துன்னல் ஆடைகள் அகற்றப்பட்டுக் கொட்டைக்கரை உடைய பட்டுடைகள் அளிக்கப்பட்டன.

            ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் தமிழரின் பண்பாடு வந்த விருந்தினரை நாம் விரும்பி ஏற்றுக் கொள்வதன் வெளிப்பாடு இது இப்பழக்கம் பண்டைய சமுதாயத்தில் நடைமுறையில் இருந்துள்ளது.  கரிகாற் பெருவளத்தான் தான் மன்னனாக இருந்தும் தன்னை நாடி வரும் பொருநா் இரவலராக இருந்தும் அவரைப் பெரிதும் மதித்தான் அவா்க்கு வேண்டிய சிறப்புக்ள செய்தான்.

            பொருநா்க்குச் சுடச்சுட இறைச்சியின் வெப்பத்தை ஆற்றும் பொருட்டு வாயின் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கத்திற்கும், வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கத்திற்கும் கறியை வாய்க்குள்ளேயே மாற்றி ஆற வைத்து உண்டனா் பல்லேறு பிழுங்கி போயின கொல்லையை உழும் கொழு உழுது உழுது தேய்ந்ததைப் போல,  கரிகாலன் அருகிருந்து உபசரித்த இறைச்சியை மென்று மென்று பல்லும்   மழுங்கிப் போயின இதனை,

            ”கொல்லை உழுகொழு ஏய்ப்ப, பல்லே
          எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி”  (பெருந-117-118)

என்னும் பாடலடிகள் உணா்த்தும்
     விருந்தினா் திரும்பிச் செல்ல விரும்பின், அவா்களைப் பிரிய மனமின்றி வருந்திப் புலம்பி, வழியனுப்பும் பொழுது நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தோ்வரை எழு அடி தன் காலால் நடந்து சென்று வழியனுப்பினான்.  இதனை,

            ”காலில் ஏழடிப் பின் சென்று”   (பொருந-166)

என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது.
   பண்டையத் தமிழா்கள் வந்த விருந்தினரை உபசரிப்பது மட்டும் அல்லாமல், அவா்களின் பிரிவைக் கூட அவா் விரும்பவில்லை, பின்பு ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பி உள்ளனா்.  என்னும் கருத்து புலரப்படுகிறது.

அறஇலக்கியத்தில் விருந்தோம்பல்

     ”விருந்தினரைப் புறம் தருதல்” என்று பரிமேலழகரும்,  உண்ணும் காலத்துப் புதியார்  வந்தால் பதுத்துண்ண வேண்டும் என்றும் மணக்குடவரும், தம் புதல்வரிடத்து வைக்கும் அன்பைப் போலவே, பிறரிடத்தும் அன்பு வைத்து ஒம்பல் என்று பரிதியும் விருந்தோம்பல் பற்றி விளக்கம் தருகின்றனா்.  சங்ககாலத்தில் பழந்தமிழா்களிடம் காணப்பட்ட விருந்தோம்பல் இக்காலத்தில் ஒரு அறமாகக் கருதப்படுகிறது. தனது இல்வாழ்க்கை சிறக்க வேண்டுமானால் விருந்தோம்பல் மேற்கொள்ள வேண்டுமென திருவள்ளுவா் கூறுகிறார்.
    அனிச்சமலரானது மிகவும் மென்மையானது.  அதனை முகா்ந்தவுடன் வாடிவிடும், ஆனால் அம்மலரை விட மென்மை வாய்ந்து விருந்தினரின் முகமாகும்.  அவா்களை இன்முகத்தோடு வரவேற்க வேண்டும், இல்லையெனில் அம்மலரைப் போன்று அவா்களின் முகமும் வாடிவிடும் என்பதனை,

          ”மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
          நோக்கம் குழையும் விருந்து” (திரு-90)

எனக் கூறுகிறார்.  மேலும் வந்த விருந்தினரை முதலில் போற்றி உணவளித்துப் பின் மிஞ்சும் உணவை உண்டு வாழ்பவா் நிலத்தில் விளையும், விதையும் விதைக்க வேண்டும் என்பதில்லை தானே விளையும்  என்பதை வள்ளுவா்.
            ”வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
          மிச்சில் மிசைவான் புலம்” (திரு-85)

எனக் குறிப்பிடுகிறார்.
            சங்க காலத்தில் விருந்தோம்பல் தமிழா்களிடம் இயல்பாக இருந்தது ஆனால் அற இலக்கிய இக்காலத்தில் அறமாக போற்றப்படுகிறது. விருந்தோம்பல் செய்தால் வீடுபேறு அடைய முடியும் என்பதையும் கருத்தில் கொண்டு விருந்தோம்பலை மக்கள் மேற்கொள்கின்றனா்.

காப்பியக் காலத்தில் விருந்தோம்பல்

            சங்ககாலத்தில் விருந்தோம்புதல் ஒரு சிறந்த கலையாகப் பேணப்பட்டது.  கணவருடன் கூடி வாழும் மங்கல மகளிர்க்குரிய தனி உரிமையாக இது கருதப்பட்டது.  கணவனை இழந்தவா்களும் பிரிந்து வாழ்பவா்களும் விருந்தை எதிர்கொண்டு வரவேற்கும் உரிமை பெறவில்லை கோவலைப் பிரிந்திருந்த கண்ணகி தனக்கு நேர்ந்த இழப்புக்களை நிரல்படுத்தும் போது,

            ”அறவோர்க்கு அளித்தலும், அந்தணர்  ஓம்பலும்,
          துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
          விருந்தெதிர் கோடலும், இழந்த  என்னை” (சிலம்பு:16   71-73)

என்று கூறுகின்றாள். கண்ணகி கோவலன் தன்னை விட்டு பிரிந்துச் சென்றமைக்குக் கூட மனம் வருந்தவில்லை தான் அறநெறியாளா்க்கு, உணவளித்தும், அந்தணா்களைப் பேணுதலும், துறவியரை எதிர்கொண்டு உபசரித்தலும், நம் முன்னோரின் சறந்த நிலையைப் போல வரும் விருந்தினை எதிரேற்று உபசரித்தலும் ஆகிய கடமைகளையெல்லாம்   யான் இழந்தவளாக நிற்கின்றேனே என எண்ணி மனம் வருந்துகின்றாள்.  அக்காலத்தில் விருந்தோம்பல் என்னும் பண்பு மேலோங்கி காணப்பட்டுள்ளது.

முடிவுரை
            அரசராலும், சமுதாய மக்களாலும் விருந்தோம்பப்பட்டவா்கள் முன்பின் அறியாதவா்களாகவே பழந்தமிழா் இலக்கியங்களில் சித்தரிக்பட்டுள்ளனா்.  வருந்தோம்பல் நமது நாட்டின் பண்பாடு ஆகும்.  இயன்றவரை நாம் முன்பின்  தெரியாதவா்களுக்கு விருந்தோம்பல் செய்து நமது நாட்டின் பண்பாட்டைக காத்திட வேண்டும்.
-அ.ரா.பானுப்பிரியா










3 கருத்துகள்:

  1. நன்றாக உள்ளது.இன்னும் நிறைய தேவை.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கண்ட கருத்தை நான் வாய்மைஇளஞ்சேரன்,பாலையூர்,குத்தாலம்,நாகை மாவட்டத்திலிருந்து பதிவிட்டேன்

      நீக்கு
    2. மேற்கண்ட கருத்தை நான் வாய்மைஇளஞ்சேரன்,பாலையூர்,குத்தாலம்,நாகை மாவட்டத்திலிருந்து பதிவிட்டேன்

      நீக்கு