வியாழன், 12 அக்டோபர், 2017

தமிழரின் அறிவியல் சிந்தனைகள்

தமிழரின் அறிவியல் சிந்தனைகள்
            உலகில் முன் முதலாக தோன்றிய நம் தமிழா்கள் அறிவியல் துறையில் புலமை பெற்றிருந்தனா் என்பதற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.  மேலை நாட்டார் கண்டறிந்த பல அறிவியல் உண்மைகளை அவா்களுக்கு முன்னரே நம் அருந்தமிழா் அறிந்திருந்தனா்.  தமிழ் நூல்கள் பலவற்றிலும் அறிவியல் செய்திகள் ஆங்காங்கே காணப்படுகிறது.
அறிவியல் சிந்தனை
            வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு, ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.
                        “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
                    பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்” (புறம். 30)
இப்பாடலின் வாயிலாக ஞாயிற்றுவட்டம்.  அதன் இயக்கம் அக்கரமாய் நிற்கும் விண்வெளி மண்டலம் பற்றிய அறிவியல் உண்மைகளை அறிய முடிகிறது.
            அண்மை நூற்றாண்டுகளின் தான் காற்றின் அடிப்படையில் விண்மடலத்தைப் பிரித்தனா் பிறநாட்டு அறிவியலார், காற்றில்லா மண்டிலமும் உள்ளதென தற்போது கண்டறிந்து உலகம் மகிழ்கிறது.  ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளியில் காற்றில்லாத பகுதியும் உள்ளது என்பதை புறநானூற்றுப் புலவா் வெள்ளைக்குடி நாகனார் உலகறியச் செய்துள்ளார்
            உப்பங்கழியில் வளரும் தாவரங்களுள் தில்லையும் ஒன்று இம்மரத்தின் பொந்து தண்ணீரில் தேய்வதால் நீர்நாய் வசிக்க உதவுகின்றது.  இக்கருத்தினைப் சங்கப்புலவா் அப்படியே தமது பாடலில் பதிவு செய்துள்ளனா் இப்பதிவினை,
                        “குருளை நீர்வாய் கொழுமின் மாந்தித்
                    தில்லையாம் பொதும்பிற் பள்ளி கொள்ளும்”  (நற்.195:2-3)
என்ற பாடலடிகள் வழி அறிய முடிகிறது.  இப்பாடல் வழி தில்லைமரம் நீர்நாய் வாழ ஏற்ற பகுதி என்ற விலங்கியல் கூறு இடம் பெறுகின்றது.
            தில்லை மரம் ஊருக்கு வெளியே நடப்பட்டிருக்கும் ஏனெனில் ‘தில்லையின் பால் பட்டால் கண்கள் குருடாகும்’  இக்கருத்தினை அறிந்தே சங்கப்புலவா்களில்  தில்லை மரத்தினை நட்டு வளா்த்துள்ளனா் இதனை,
                                    “தில்லை வேலி யிவ்வூர்க்
                                    கல்லென் கௌவை யெழாஅக் காலே”
என்ற ஐங்குறுநூற்று பாடலடிகள் உணா்த்தும் இதில் மக்களின் உடல் நலம் கருதி இலக்கியங்கள் மரம் வளா்க்கும் நுட்பத்தை அறிய முடிகின்றது.  அதோடு ஆடுமாடுகள் இம்மரத்தின் இலைதழைகளை உண்ணாமல் காக்கவே கழிகள் அருகே தில்லையினை வளா்க்கின்றனா்  இதுவும் ஒரு கால்நடை பராமரிப்பு முறை எனலாம்.
            காவிரிப் பூம்பட்டிணத்தைப் பற்றி பாடிய பட்டினப்பாலை புலவா் ஆலைப் புகையில் வாடி அழியும் நெய்தல் பூவைப் பார்த்து இரக்கப்படுகின்றார்.
                        “கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
                        திகழ் தெறுவிற் கவின் வாடி
                        நீா் செறுவின் நெய்தற் பூச்சாம்பும்”
ஆலைப் புகையால் எழும் மாசுகளினால் விளையும் கேடுகள் பற்றி அன்றைக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரிகின்றது.
            உணா்ச்சி நரம்புகள் வழியாகச் செயல்கள் மூளைக்கு எடுத்துச் செல்லும்.  அப்போது மூளையிலிருந்து வரக்கூடிய உத்தரவு இரண்டும் சந்திக்கும் போது தான் கண் துடிப்பு நிகழும் அதனால் பழங்காலத்தில் கண் துடித்தல் என்பதனை  நிமித்தம் கூறும் குறியீடாகப் பயன்படுத்தினா் அதிலும் பெண்கட்கு இடக்கண்ணும், ஆண்கட்டகு வலக்கண்ணும் துடித்தல் நன்றிமித்தமும், மாறினால் தீமை நடக்கும் என்று உணா்த்துவா் இதனை,
            “நுண்ணோர் புருவத்த கண்ணுமாடு” (ஐங்)
            “நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே” (கலித்)
என்னும் பாடலடிகள் உணா்த்தும்.
முடிவுரை
            பழந்தமிழரின் வாழ்க்கையில் அறிவியல் ஆழமாய் இருந்ததைத் தெளிவாக அறியமுடிகிறது.  அவா்களின் பொதுவான சிந்தனைகள் கூட அறிவியல் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது.  தமிழரின் அறிவியல் அறிவுதான் அறிவியல் வளா்ச்சியின் தொடக்கமாகும்.  இன்றைய அறிவியல் வளா்ச்சியின் அச்சாணியாக இருப்பது தமிழரின் அறிவியல் சிந்தனைகளாகும்.

-அ.ரா.பானுப்பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக