திங்கள், 15 மே, 2017

சுவாமி விவேகானந்தா் கூறும் மனித ஆளுமை

சுவாமி விவேகானந்தா் கூறும் மனித ஆளுமை
முன்னுரை
            இந்தியா்கள் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைவராலும் போற்றப்படும் ஒப்பற்ற மனிதனாகத் திகழுபவா் சுவாமி விவேகானந்தா் ஆவார்.  இவா் மனிதனிடம் ஆளுமைப் பண்பானது அவசியம் என்கிறார்.  ஆளுமையை வளா்த்துக்கொள்ள நாம் செய்ய வேண்டிய முறைகளைப் பற்றியும் வாழ்வில் மக்கள் நலம் பெற செய்ய வேண்டிய செயல்களைப் கூறியுள்ளார்.  அவற்றை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மனித ஆளுமை
            நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும்.  கல்வி, பயிற்சி இவை அனைத்தின் இலட்சியமும் மனிதனை உருவாக்குவதே என்கிறார்.  சுவாமிஜி நாம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.  நாம் ஒன்றைச் செய்து அதனால் ஏற்படும் வெற்றித் தோல்வி ஆகியவற்றிற்கு நாமே காரணம் ஆவோம்.  ஆனால் நம் மனம் பிறரைக் குறைக் கூறுவதற்கே எத்தனிக்கும்.  எனவே அத்தன்மையை நீக்கிக் கொள்ளவேண்டும்.  மேலும் தத்துவ அறிஞா்களிடம் வலிமை குன்றிய ஆளுமையே காணப்பட்டது.  ஆனால் முற்றும் துறந்த ஞானிகளிடமும் தீா்க்கத்தரிசிகளிடமும் தான் வலிமைமிக்க  ஆளுமை காணப்பட்டது.  காரணம் இருவருக்கும் உள்ள மன வேறுபாடு என்கிறார் சுவாமி விவேகானந்தா்.
ஆளுமையின் வளர்ச்சி
            நாம் அனைவரும் ஆளுமையை வளா்த்துக் கொள்ள யோக சாஸ்திரம் கூறும்  நியதிகளையும் முறைகளையும்  பின்பற்றினால் அவா்களது ஆளுமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார்.  மேலும் தன் மனதை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் அடக்க முடியும்  இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்பொழுதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளன.  தூய்மையும் ஒழுக்கமும் நிறைந்தவன் தன்னை அடக்கியாளுகின்றான்.  எல்லா மனங்களும் ஒரே தன்மையையே கொண்டிருக்கும் என்கிறார்.  ஏனெனில் அவை அனைத்தும் ஒரு பெரிய மனத்தின் பகுதிகள் என்று விளக்கம் தருகின்றார்.  தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தையும் பற்றிய ரகசியத்தை அறிந்து அதனை அடக்கும் வல்லமையைப் பெறுகின்றான்.  இத்தகைய நுண்ணிய இயக்கங்களை அடக்கிவிட்டோமேயானால் பல கவலைகள் நீங்கிவிடும், பல தோல்விகளைத் தவிர்த்துவிடலாம் என்கிறார் விவேகானந்தா்.
இந்தியா் மனவலிமை.
            மனிதன் பெறக்கூடிய ஆற்றல்களுக்கு அளவேயில்லை.  இந்தியா்களின் மனமானது ஒன்றில் ஆழ்ந்துவிட்டால் அதிலேயே மூழ்கிவிடும் பிற செயல்களைப் புறக்கணித்துவிடும்.  இந்தியாவில் தான் கணிதம் ஆரம்பமாயிற்று. அல்ஜீப்ரா கணிதம் தோன்றியதும் இங்கே தான்.  நியூட்டன் பிறப்பதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்பே இங்கே புவியீர்ப்பு விசையைப் பற்றி அறிந்திருந்தனா்.  நினைத்தவற்றை எளிதாகப் பெற மிக எளிய வழியாக தோன்றியதால் இந்தியா்கள் அனைவரையும் ஈா்த்தது நியதிகளுக்கு இணங்க மனம் எதையும் செய்ய  வல்லது என்னும் நம்பிக்கை இந்தியா்களின் உள்ளத்தில் உறுதியாக நின்றது என்கிறார்.
நமது செயல்கள்
            பெயா், புகழ் என எதைப் பற்றியும் கவலைப் படாமல் நன்முயற்சி என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வேலைகளில் ஈடுபடுகின்றனா்.  இன்னும் சிலா் உயா்ந்த இலட்சியங்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்கிறார்கள். மனித  சமுதாயத்திற்கும் உதவுகிறார்கள்.  ஏனெனில் இவா்கள் நன்மை செய்வதிலும் அன்பு காட்டுவதிலும் நம்பிக்கை கொண்டவா்கள். பொதுவாக பெயா் புகழுக்காச் செய்யப்படும் செயல்கள் உடனடியாகப் பலனளிப்பதில்லை.  சுயநலமின்றி ஒருவன் செய்யும் வேலை அவனுக்கு மிகவுயா்ந்த பலனைத் தருகின்றது.  ஆனால் அப்படி வேலை செய்ய மக்களுக்கு பொறுமையில்லை நமக்கு சுவாமிஜி செய்யும் தொழிலைச் சிறப்பாகச் செய் என்னும் கருத்தையே பசுமரத்தாணி போன்று மனதில் பதிய வைக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
சுயநலம் கூடாது
            சுயநல நோக்குடன் வெளியே செல்லும்  ஆற்றல்கள் அனைத்தும் வீணாகும் என்கிறார்.  மேலும் வெளியே சென்ற ஆற்றல் திரும்ப நம்மிடன் வந்து சேருவதற்கு வழியில்லை என்றும் சுயநலம் என்னும் கொடிய ஆற்றலை நாம் கட்டுப்படுத்துவோமானால் ஆற்றல்கள் மீண்டும் வளரத் தொடங்கும்.  இந்த சுயக் கட்டுப்பாடே சிறந்த முறை என்கிறார்.  நமது வாழ்க்கை என்பது ஒரு சிறிய வட்டம், அதுவே நமது உலகம் அதைக் கடந்து பார்க்கின்ற பொறுமை இல்லாமலே நாம் ஒழுக்கமற்றவா்களாகவும் தீயவா்களாகவும் மாறிவிடுகின்றோம்  எனவே மனிதா்களாகிய நமக்கு சுயநலம் என்பது கூடாது என்கிறார்.
தீய எண்ணங்களைக் களைதல்
            எண்ணங்களுக்கு ஏற்ப நாம் உருவாகின்றோம்.  ஆகவே நாம் என்ன நினைக்கின்றோம் என்பதில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.  நம்முடைய ஒவ்வொரு எண்ணத்திலும் நம்முடைய குணமானது படிந்துள்ளது.  மகான் ஒருவரின் பேச்சும் ஏச்சுக்களும் கூடத் தூய அன்பில் துாய்ந்தவையாக இருக்கும் நமக்கு அவை நன்மையே பயக்கும் என்கிறார் சுவாமிஜி.  ஒரு மனிதன் தொடா்ந்து தீய வார்த்தைகளைக் கேட்டு தீய எண்ணங்களையே எண்ணி, தீய செயல்களையே  செய்து கொண்டிருத்தால் அவனது மனம் தீய எண்ணங்களால் நிறைகிறது.  அவை அவனையும் அறியாமல் ஆட்டிப்படைக்கின்றன.  தீய எண்ணங்கள் தொடா்ந்து செயல்பட்ட வண்ணம் இருக்கின்றன.  எனவே அவற்றின் விளைவு தீமையாகத் தான் இருக்கும்.  அதனால் அம்மனிதன் தீயவனாகின்றான்.  எனவே நாம் நம்மைப் போல் பிறரையும் எண்ணி தீய எண்ணங்களை முற்றிலுமாகக் களைதல் வேண்டும் என்கிறார்.
நீயே முதலாளி
            சுவாமிஜி கூறும் போது எஜமானைப் போல் வேலை செய்ய வேண்டும்.  அடிமையைப்போல் அல்ல என்பதை வலியுறுத்துகின்றார்.  இடைவிடாமல் வேலை செய் ஆனால் அடிமைகளை போல் வேலை செய்யாதே என்கிறார்.  சுயநலத்துடன் செய்யும் வேலை அடிமை வேலை.  அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வரும் என்கிறார்.  தனக்குத் தானே கட்டுப்பாடு கொண்டு செய்தால் வெளியில் இருந்து எந்தச் சக்தியும் நம்மீது ஆதிக்கம் செலுத்த முடியாது.  எனவே அடிமைத்தனமானது விரைவில் இன்பமயமாகிவிடும்.  அதன்பின் நன்மை தீமை என்ற எதுவும் நம்மை பாதிக்காது என்கிறார்.
நன்மை செய்தல்
            நாம் மற்றவா்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்பது பிறருக்கு உதவி செய்தல் என்பதாகும்.  நாம் பிறருக்கும் நன்மையை மட்டுமே செய்யவேண்டும்.  அது ஒன்றே நம் வாழ்நாளில் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்கிறார்.  மேலும் நடந்ததை எண்ணி வருந்தாதே கடந்ததை எண்ணி கலங்காதே என்கிறார்.  நீ செய்த நல்ல செயல்களையும் நினைவில் வைத்துக் கொள்ளாதே என்கிறார்.  பெற்றுக் கொள்பவன் அல்ல கொடுப்பவனே பேறு பெற்றவன் என்கிறார்.  மேலும் உங்கள் தான  நிலையையும் இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி அதன்மூலம் நீங்கள் தூய்மையும் நிறை நிலையையும் அடையுங்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தா்.
அன்பே பலனைத் தரும்
            அன்பால் உலகையே வெல்லலாம் என்பர்.  அன்பு, நோ்மை, பொறுமை இவை மூன்றும் இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை.  அன்பே வாழ்வின் ஒரே நியதி எல்லா சுயநலமும் நரகமே  என்கிறார்.  மேலும் நன்மை செய்வது வாழ்வு நன்மை செய்யாமல் இருப்பது சாவு.  அன்பு இல்லாதவைத் தவிர மற்ற அனைவரம் இறந்தவா்களாகக் கருதப்படுவா்.  அன்பு, அறம், புனிதம் இவை நம்மிடம் வளரும்தோறும்  அவற்றை நாம் வெளியிலும அதிகமாகக் காண்போம்.  பிறரைக் கண்டிக்கும் போதெல்லாம் நம்மை நாமே கண்டித்துக் கொள்வது தான்.  மேலும் நம்மை நாமேசரிசெய்து கொண்டால் உலகமே நமக்காக இணங்கிவரும் என்கிறார்.  மேலும் உலகில் உண்மையினுடைய முன்னேற்றத்தின் ஒவ்வொரு அடியும் அன்பின் ஆற்றலாலேயே ஏற்பட்டுள்ளது.  குறை கூறுவது ஒரு போதும் நன்மை செய்யாது எனவே நாம் அனைத்து உயிரினங்களின் மீது அன்பை செலுத்த வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தா்.
முடிவுரை
            மனிதன் தன்மீது கொண்ட நம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அன்பால் எதையும் வெல்லலாம் ஆனால் என்றும் சுயநலமாக இருக்கக் கூடாது தனது சுயநலத்திற்காக பிறரை அடிமைப்படுத்தக் கூடாது.   நாம் பிறருக்கு நன்மை செய்ய வில்லை என்றாலும் தீங்கு விளைவிக்கக் கூடாது.  தீய எண்ணங்களை வேரோடு களைதல் வேண்டும் ன பலவகையானச் சிந்தனைத் துளிகளை சிதறவிட்டுள்ளார்.  இதனை நாமும் பின்பற்றி பயனடைவதே சுவாமிஜி எண்ணத்தின் வெற்றியாகும்.  எனவே நாமும் பின்பற்றுவோம் என உறுதி கூறுவோம்.
-ஆ.சகுந்தலா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக