வியாழன், 26 ஜூலை, 2018

நில்.. கவனி.. வெல்


நில்.. கவனி.. வெல்

          சிங்கப்பூரிலுள்ள பிரபல தனியார் நிறுவனமொன்றில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறான் முடியரசன். நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அங்கு வேலை செய்கிறார்கள்,  சீனா்கள் அதிகமாகவும், அடுத்து மலையாளிகளும் ஒன்றிரண்டு தமிழா்களும் அதில் அடக்கம்.

          வேலைக்குச் சேர்ந்த சில நாள்களிலேயே தொழில் நுணுக்கத்தைக் கற்றுக்  கொண்டு நேரங்காலம் பார்க்காமல், ஓய்வு விடுமுறை கருதாமல் வேலை போட்டுக்  கொடுத்த  நிறுவனத்திற்கு விசுவாசமாக உழைப்பை கொட்டிக் கொடுத்தான் முடியரசன்.  வாழ்க்கை கொடுத்த முதலாளிக்கு உழைப்பைத் தவிரக் கொடுப்பதற்கு அவனிடம் வேறு ஒன்றுமில்லை.  அவனைப் போன்றே பலருடைய கடின  உழைப்பால் மற்ற நாடுகளிலுள்ள கிளை நிறுவனங்களைக் காட்டிலும் அதிக இலாபமும், பெரும் புகழும் ஈட்டியது.. அவா்கள் நிறுவனம்.

          உலக அரங்கில் தொழில் துறையில் “டாப்-10” பட்டியலிலும் இடம் பிடித்து, வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கிற, தாய் மடியை அறுக்கத் துணிந்த கருங்காலிகள் ஒரு சிலா் இருக்கத்தான் செய்தார்கள்.  எதிரிகள் வெளியிலிருந்தால் பரவாயில்லை..  உள்ளேயே துரோகிகயாய் மாறி காலை வாறிவிடுவதே  முதல் வேலை  என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தால் என்ன செய்வது?

          “தானும் வேலை செய்யக்கூடாது அடுத்தவனையும் செய்ய விடக்கூடாது என்ற கீழ்மைக்குணம் கொண்ட அவா்களைச் சொல்லிக் குற்றமில்லை, அவா்களை நம்பி வேலைக்குச் சேர்ந்த முதலாளியைச்   சொல்லவேண்டும்.

          நிறுவனத்தைத் தோளில் தூக்கிச் சுமக்காவிட்டாலும் பரவாயில்லை,  ஒதுங்கி நின்றாலே போதும்.. ஆனால்  ‘குழிப்பறிப்பது’  மனைவியை விற்கும் மலிவான செயல் என்று எப்படிப் புரியாமல் போனது? புரிந்தும் செய்தால் அவா்கள் என்னவகைப் பிரவி?
          பல நேரங்களில் இப்படித்தான் மனசுக்குள் புலம்பியும், புழுங்கியும் பல இரவுகள்  பகல்களாகிப் போனது முடியரசனுக்கு அவனது தாய் தந்தையின் வளா்ப்பு அப்படி..
          கம்பெனி துவங்கி 25 ஆண்டுகள் ஆவதால் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டு புதிதாக ஒரு மேலாளரை நியமிக்க நிர்வாக இயக்குநா் கட்டளையிட்டிருந்தார்.  சீனியா் மேனேஜா் பலரிடமும் கேட்டு முடியரசனைத் தேர்வு செய்தார்.
          ஆனால் சிலா் ‘பெரும்பான்மையாக நாங்களிருக்க  வேண்டுமென்றே நாங்கள் வரக்கூடாது’ என்று திட்ட மிட்டு செய்யப்பட்ட சதி ‘நான் எதிர்க்கிறேன்’ ‘நான் புறக்கணிக்கிறேன்’ ‘நிறுவனத்திற்கு எப்படி இலாபம் வருகிறதென்று பார்ப்போம்.. சும்மா விட மாட்டோம்’  என்று கூச்சலெழுப்பினா்.

          பொறுப்பைத் தட்டிப் பறிப்பதற்கு இனத்தைக் காரணம் காட்டியா முன்னிறுத்துவார்கள் வேதனையாகயிருந்தது இருந்தாலும் பலரின் விருப்பத்தை மறுக்க முடியாமல் அதை மனதுடன் ஒப்புக் கொண்டான் முடியரசன்.

          மறுநாள் அலுவலகத்திற்குள் நுழையும்போது எப்பொழுதும் போன்றில்லாமல் பார்ப்பவா்கள் பலரிடமிருந்து மௌனமும், இல்லாமல் போன கை குலுக்கல்களும், சடைப்பேச்சுக்களும், ஏச்சுக்களும், கேள்விப்பட்ட சதித்திட்டங்களும், சீனியா் மேனேஜா் ‘உங்கள் பிரச்சனை இன்னும் ஓயவில்லை எதிர்ப்புகள் காலைமுதலே வந்து கொண்டிருக்கின்றனா்’  என்று சொன்னதும் உடைந்தே போனான் முடியரசன்.

          எத்தனை எதிர்ப்புகள் தனக்கு வந்தாலும் எதிர்த்து நின்று பகைவெல்லும் திறம் பெற்றவன்  ‘வெள்ளிவிழா சீர்குலைந்துவிடுமோ?’  என்று கோழையாகிப் போனாள்.  இந்தப் பதவிக்குத் தகுதியில்லாததா என் இத்தனை ஆண்டுகால உழைப்பு? பதவியைத் தேடிப் போகவில்லை வந்த வாய்ப்பை மறுக்கவில்லை.  இதில் எங்கு இருக்கிறது தவறு?  தமிழனாய் பிறந்ததுவா தவறு?

          நல்லவா்களும் சகுனிகளால் எதிரிகளாய் மாறிப் போவதை விரும்பவில்லை பலா் நட்பை இழக்க விரும்பவில்லை.  தன்னைத் தேடி வந்த ‘அரசவைக் கவிஞா்’ பதவியைக் கால் தூசாகக்  கருதி உதறித்தள்ளிய கொள்கை மாறாக் குணக்குன்று வீறுகவியரசா் முடியரசன் பெயரையல்லவா அவனுக்கு அவன் பெற்றோர் பெயா் சூட்டியிருக்கிறார்கள். பெயருக்குப் தகுந்தவாறு துளியளவாவது வாழவேண்டாமா?

          மனசுக்குள் நன்றாக யோசித்து தீா்க்கமாய் முடிவெடுத்தான்.  நிர்வாக இயக்குநருக்கு தொலைப்பிரதி (Fax) அனுப்பினான் ‘ஒவ்வொரு நாளும் எதிர்ப்புகளோடு பதவியிலிருக்க விரும்பவில்லை, பதவியில்லாவிட்டாலும்  என் பணிகள் என்றும் தொடரும். ஏற்கனவே சொன்னதுபோல் ஒரு மனதாய் ஒத்துழைத்தால் பொறுப்பேற்கிறேன்.  இல்லையேல் வெள்ளிவிழா என்னால் சீா்கெட வேண்டாம் இந்தப் பதவி ‘மணிமகுடம்’ அல்ல ‘முள் கிரீடம்’ என்று எனக்குத் தெரியும்.  அதை விரும்பியவா்களிடமே ஒப்படைத்துவிடுங்கள்  என்னைத் தேர்வு செய்தவா்களும் என்னைப் புரிந்து கொள்வார்கள்.  மன்னிக்கவும்’ அனுப்பியதும் மனதிலுள்ள பாரம் கொஞ்சம் குறைந்திருந்தது.

          வேலை முடிந்து அறைக்கு வந்ததும் தனக்கு பிடித்த அப்துல் ரகுமானின் கவிதைப் புத்தகத்தை வாசித்தால் ‘வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நழுவும் என் வோ்களை என்ன செய்வாய்?  படித்ததும் மூளையின் ஒரு மூலையில் நம்பிக்கை மின்னல் வெட்ட துயரத்தைத் தூக்கி எறிந்துவிட்டுத்துள்ளி எழுந்தான்.

          கிளைகளைத்தானே அவா்களால் வெட்ட முடியும்?  என் வோ்களையும் விழுதுகளையும் அவா்களால் நெருங்கக் கூடமுடியாது.

          தூங்கும் புலியை இடறிய சிதடன் போலாகிவிட்டது நிலைமை.  சரியான காலத்திற்காய் முடியரசன் காத்திருந்தான் முடியரசனை முடிசூட்டிக் கொள்ளக் காலம் காத்திருந்தது.
          முனைவா்.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக