சனி, 23 ஜூன், 2018

கல்வி கரையில.....


கல்வி கரையில.....

            தனியார் பள்ளியொன்றில் ஐந்தாண்டுகளாய் தமிழாசிரியா் பணியிலிருந்து, விடாமுயற்சியோடு  ஆசிரியா்தகுதித் தேர்வெழுதி, மூன்றாவது முறை தேர்வாகியும் வேலை கிடைக்காமல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் நேர்முகத் தேர்விற்குப் படையெடுத்து, படையெடுத்து கடைசியில் கபிலனுக்குக் கிடைத்தே விட்டது வேலை,  

            ஆயிரமாயிரம் கனவுகளோடு, ஆசைகயோடு வேலையில் சேர்ந்தவனுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது, தனியார் பள்ளியில் மாணவா்களிடமிருந்த அக்கறையும், ஆர்வமும் பல பேருக்குத் துளியும்  இல்லை.  அவா்களைச் சொல்லியும் குற்றமில்லை.  மிகவும் பின்தங்கிய கிராமங்களில், அன்றாடப் பிழைப்புக்கே அல்லல்படும் குடும்பங்களில், தாயொரு பக்கம் தந்தையொடு பக்கமாகி சிதறிக் கிடக்கும் வீடுகளில், என்ன  வீட்டுப்பாடம் கொடுத்திருக்கிறார்கள், என்ன படிக்கிறாய், என்ன செய்கிறாயென்று கேட்கக் கூட ஆளில்லாத  சூழலிருந்து வரும் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு வருவதற்காகவே கும்பிடு போட வேண்டும்.  அவா்களைக் குற்றஞ் சொல்லுவதில் நியாயமில்லை  என்பதை  வெகு சீக்கிரமாகவே உணா்ந்து கொண்டான்.

            ஆனாலும் கபிலனுகு்கு அவா்களைப் படிக்க வைப்பது பெரும் சவாலாயிருந்தது  கொஞ்சம் அதிகப்படியாய் அக்கறையெடுத்து சிறப்பு வகுப்புகள் எடுத்து சொல்லிக் கொடுத்தால் ‘புதுத் துடைப்பம் ல.. அப்படித்தான் பெருக்கும்’ காதுபடவே கிண்டலடித்தார்கள் சக ஆசிரியா்கள்.  முதலில் வருத்தப்பட்டவன் பிறகு வாடிக்கையாகிப் போன வார்த்தைகளைப் பொருட்படுத்து வதில்லை.

            இருப்பினும், மெய் வருத்தக் கூலி தரத் தவறும் முயற்சிகளால் சில நேரங்களில் உடைந்தும் போவான்.

            “இந்த மர மண்டைகளுக்குள்ள எதையும் திணிக்க முடியாது.  என்னதான் முட்டி மோதி தலைகீழ் நின்றாலும்  இதுதான் நிலைமை.  எங்களுக்குத் தெரியாதா இவனுகளப் பத்தி, தண்டங்கள வைச்சுக்கிட்டு செண்டம் கனவு காணலாமா?  வந்துட்டாரு.. பெரிய இவரு..” வெந்த புண்ணில சுத்தி நின்று வேலெடுத்துப் பாய்ச்சினார்கள்.  
       
            படியளக்கும் பள்ளியால் வாழ்ந்து கொண்டு மண் வாரித் தூற்றி எப்படிந்ததான் மனசு வருகிறது? நன்றி - விசுவாசம் நாய்க்கு மட்டும்தானோ?  உலை பொங்க வைக்கும் பள்ளிக்கூடத்திற்கே உலைவைக்கும் மாபாதகம் படித்தவர்களுக்கு அழகா?  என்னென்னவோ எண்ணங்கள் நெஞ்சத்தை அழுத்தும்.  தப்பிக்க ஓய்வு நேரங்களில் நல்ல நல்ல புத்தகங்களாய் தேடிப் பிடித்து வாசிக்கத் தொடங்கினான். படிக்கப் படிக்க பசி ருசித்தது. புதிய சிந்தனை, புதிய வெளி புலப்பட்டது.

            “ஊக்க ஊதியத்திற்காய்ப் படிக்கிறான் போல.. ”கிசுகிசுத்துக் கொண்டார்கள். ‘படிப்பதுதான் - என் ஊக்கத்திறகான ஊதியம் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
            “கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் பிஞ்சுகள் கரைய மாட்டார்களோ?  ‘முயற்சிகள் பலனளிக்கவில்லையென்றால் உழைப்பில் தவறில்லை.  வழிமுறைகளிலில் தான் தவறிருக்கிறது’ பொறி தட்டியது போல்  யாசனை தோணியது கபிலனுக்கு.

            ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு பூச்செடிபோல.. நினைத்த நேரத்தில் பூக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது எவ்வளவு மூடத்தனம்.

            சொல்லிக் கொடுக்கும் முறைகளை, உத்திகளை மாற்றினான், எதிர்பார்த்தைதைவிட அதிகமாய்ப் பலன் கிடைத்தது.

            கல்வி, கலை, விளையாட்டு என்று மாணவா்களின் ஒவ்வொரு சாதனைக்குப் பின்னும் கபிலனின் ஊக்கமளிப்பும் கடின உழைப்பும் இருந்தது.      
    
            ஒதுங்கிச் சென்ற,  முரண்டு பிடித்த, மௌனித்த பிள்ளைகள் கபிலனால் சாதனையாளா்களாக மிளிர்ந்தார்கள்.

            சாதிச் சகதிக்குள் சிக்கிக்   கொண்டு, வெட்டி வேதாந்தம் பேசி கொண்டு, உழைக்காமல் உண்ணுவதற்கு கபிலன் தயாராயில்லை அப்படியிருக்கவும் அவன்படித்த புத்தகங்கள்  சம்மதிக்கவில்லை.  உலகில் கற்று முடிந்தவரென்று எவருமில்லை, கற்றுவிட்டோமென்று புத்தகத்தையும், புத்தியையும் மூடிவிட்டவன்  ஆசிரியராயிருக்கமுடியதாதென்று உறுதியாய் நம்பிய கபிலன் கற்றுக் கொண்டேயிருக்கும் ஆசிரியராய் இருக்கவே விரும்பினான்.   ஊதிய உயா்வுக்காய்ப் போராடுவதைப் பின்னுக்குத் தள்ளி மாணவா்களின் உயா்விற்காயப் போராடுவதற்கே முன்னுரிமை கொடுத்தான்.

            படிப்பாளிகளை படைப்பாளிகளாய் விதைத்துத் கொண்டே இருந்தான் விதைகள் விருட்சங்களாய் மாறி வனங்களைப் பிரசவித்தது.

சிந்திக்க: குறள்: 399,669
தியானிக்க: சீராக்கின்ஞான் 34:3-34, தீ.பா 25:3

-முனைவா்.ஸ்டீபன்மிக்கேல்ராஜ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக