புதன், 12 ஜூலை, 2017

தமிழ் இலக்கணங்களில் பால்பகுப்பு முறைகள்

தமிழ் இலக்கணங்களில் பால்பகுப்பு முறைகள்

தொல்காப்பியம் தொடங்கி தமழ் இலக்கண நூல்களில் காணப்படும் பால் பகுப்பு முறையை ஆய்வதாக  இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியத்தில் பால்பகுப்பு முறை
            ஆண்பால், பெண்பால் பயா்பால் ஆகிய மூன்றுக் உயா்திணைக்குரிய பால்கள் என்பதை,
            ஆடுஉ அறிசொல் மகடூ அறிசொல்
            பல்லோ ஏறியுஞ் சொல்லொடு சிவணி
            அம்முப் பாற்சொல் உயா்திணை யவ்வே (தொல். சொல்.2)
என்னும் நூற்பாவில் தொல்காப்பியா் விளக்குகிறார்.
            அதேபோல் ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டும் அஃறிணைக்குரிய பால்கள் என்பதை,
            ஒன்றறி சொல்லே பலவறி  சொல்லென்
            றாயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே (தொல்.சொல்.3)
என்னும் நூற்பா உணா்த்துகிறது.
            மேலும், இயற்கையின் அமைப்பிலிருந்து மாறுபட்டு ஆண் தன்மை குறைத்து பெண் தன்மை மிகுந்தோ, பெண்  தன்மை குறைந்து ஆண் தன்மை மிகுந்தோ விளங்குபவா்களை அம்மிகுந்த தன்மையால் ஆண் பாலாகவோ,  பெண்பாலாகவோ அமைத்தல் வேண்டும் எனத் தொல்காப்பியம் நவில்கிறது. (தொல்.சொல்.4)
ஒத்த மரபு
            தொல்காப்பியரின் ஐம்பாற் மரபை அவிநயம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், இனிய  தமிழ் இலக்கணம், இலகு தமிழ் ஐந்திலக்கணம், தமிழ்க் காப்பு இயம் போன்றவை உடன்படுகின்றன.
            மேலும், தொல்காப்பியத்தை அடியொற்றி அவிநயம், இலக்கண விளக்கம் போன்றவை பேடு, தெய்வம் முதலியவை உயா்திணையிடத்து அதற்குரிய  பாலாய் வேறுபட்டு இசைக்கும்  என்னும் கருத்தை ஏற்றும் கொள்கின்றன.
மரபு மாற்றம்
*     நன்னூல் தொல்காப்பியரின் ஐம்பாற் பகுப்பை ஏற்றுக் கொள்கிறது.  எனினும் மூன்றாம் பாலினத்தைச் சுட்டுமிடத்து சற்றே மாறுபடுகிறது நன்னூல்.  பெண் தன்மையை விட்டு ஆண் தன்மையே அவாவுவனவாகிய பேடுகள் உயர்திணை ஆண் பாலாகும்.  ஆண் தன்மையை விட்டுப் பெண் தன்மையை அவாவுவனவாகிய பேடுகள் உயா்திணைப் பெண் பாலாகும் என்று விளக்கும் நன்னூல்  இவை இரண்டும் உயா்திணை ஆவதன்றி அஃறிணையை ஒத்தும் நடக்கும் (நன்.264) என்கிறது.  ஆனால் தொல்காப்பியம் உயா் திணையில் வரும் என்று மட்டுமே கூறுகிறது.  அஃறிணையில் வரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடவில்லை.  பேடுகளாகப் படைக்கப்பட்டவா்களும் மனிதா்களே என்று அவா்களையும் உயா்திணையில் வைத்துப் பார்த்த தொல்காப்பியரின் மனப்பாங்கு பாராட்டத்தக்கது.
*     சுவாமிநாதம் தொல்காப்பிய பால்குப்பை ஏற்றுக் கொள்கிறது எனினும் உயா்திணையை உயா்பால் என்றும், அஃறிணையை இழிபால் என்ற சொல்லாலும் குறிக்கிறது.  மேலும் நன்னூலைப் பின்பற்றி தெய்வம், பேடு என்பனவற்றையும் ஐம்பாலுள் அடக்கி வினைமுற்று விகுதியால் விளக்குவா் என நவில்கிறது.  (சு.நா.35)
*     அறுவகை இலக்கணம் முந்தைய  இலக்கணிகளின் கருத்திலிருந்து வேறுபட்டு ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டனை மட்டுமே உயா்திணைப் பாலாகக் குறிப்பிடுகிறது.  பலா்பாலைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, பலா்பாலானது  ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டிலும் அடங்கிவிடும் ஆதலின் அதனைத் தனித்துக் கூறவில்லை போலும்.  மேலும், அஃறிணைப் பாலை ‘அலிப்பால்’  என்ற சொல்லாட்சியால் அறுவகை  இலக்கணம் சுட்டுகிறது (அறு.185)
மரபு அழிதல்
*     வீரசோழியம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து, தென்னூல் விளக்கக்  போன்ற நூல்களில் பால் புகுப்பு கூறப்படவில்லை.
*     அறுவகை இலக்கணத்தில் பலா்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய பால்பகுப்பு முறைகள் பேசப்படவில்லை.
*     நேமிநாதம், வீரசோழியம், பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து, தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், இலகு தமிழ் ஐந்திலக்கணம், இனிய தமிழ் இலக்கணம், தமிழ்க் காப்பு இயம் போன்றவற்றில் ‘பேடு’ பெறும் பால்முடிபு குறித்து யாதும் கூறப்படவில்லை.
*     அறுவகை இலக்கணம் அஃறிணையை ‘அலிப்பால்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.  மற்றபடி மூன்றாம் பாலினம் குறித்த செய்திகள் அறுவகை இலக்கணத்தில் காணப்படவில்லை இவ்விடத்தில் ‘அலிப்பால்’  என்பது மூன்றாம் பாலினத்தைக் குறிக்காமல் அஃறிணையைக் குறிக்க வரும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொகுப்புரை
·        தொல்காப்பியம் குறிப்பிடும் ஐம்பாற்பகுப்பை பெரும்பான்மையான இலக்கண நூல்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
·        பேடுகளுக்கான பால் முடிபை தொல்காப்பியல் உயர்திணையில்  கூற, நன்னூல் அஃறிணையை ஒத்தும் நடக்கும் என்கிறது
·        உயா்திணை, அஃறிணையைக் குறிக்க உயா்பால், இழிபால் எனற சொல்லாட்சியை சுவாமிநாதம் பயன்படுத்தியுள்ளது.
·        அஃறிணைப்பாலை ‘அலிப்பால்’ என்ற சொல்லாட்சியால் அறுவகை  இலக்கணம் சுட்டுகிறது.


 கா.சுபா














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக