திங்கள், 21 மே, 2018

ஈரம் ஈன்ற வீரம்


ஈரம் ஈன்ற வீரம்

          வழக்கம் போல  ஆனந்தகங்கைத்தூது  மாத இதழ் வந்ததும் எழுத்தாளர் ஜெனித் சேகரின் ‘அன்புள்ள ஆசிரியருக்கு’ கடிதத்தைத் தேடிப் பிடித்து, படித்து முடித்ததும்  தன் ஆசிரியரை நினைத்துக் கொண்ட இராகவனின் விழியோரம் ஈரம் கசிந்தது.

          பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வந்து பலகாலமான பின்னும் அன்றைக்குச் சொன்ன ஆசிரியரின்  வார்த்தைகள்தான் இன்றைக்கும் பல நேரங்களில் வழித்துளையாய் இருக்கிறது.
          ‘நான் சொல்வதைக் கேள், கைகளைக் கட்டு, அமைதியாயிரு, வாயை மூடு’ என்று மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்த வகுப்பறைச் சுவா்களை ‘நிறையக் கேள்வி கேள்’ துணிந்து செயல்படு, போராடு, உரக்கப் பேசு’  என்று மாற்றிச் சொல்லவைத்த மகான் அல்லவா ஆசிரியா் ஜோல்னா ஜவஹா்.

          நமக்குப் பிடித்தவா்களின் விருப்பமே நமக்கும் விருப்பமாகிப் போகும்.  அப்படித்தான் எப்படியெல்லாம் வாழக்கூடாதா அப்படியெல்லாம் மதுவும், மாதுவுமே கதியென்று மயங்கிக் கிடந்த கவிஞா்களின் வார்த்தை ஜா்லங்களுக்குள் சிக்கிக் கொள்ளாதவன் இப்படித்தான் வாழ வேண்டுமென்று கொள்கையில் பிறழாமல் வாழந்து காட்டிய வீறு கவியரசா் முடியரசனை ஆசிரியரைப் போலவே ஆழமாய் நேசித்தான்

          ‘காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்ல, கைம்மாறு விழைந்து புகழ்பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன், தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத் தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன், மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்.  ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்க எனத்துஞ்சாமல் தமது நாட்டில் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்.  மேலாங்கு கொடுமைகளைக் காணும்போது காட்சிக்குப் புலியாகிக் கொடுமைமாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன், தாழ்ச்சி சொலும் அடிமையலன் மக்கட்கெல்லாம்  தலைவனைப் பாடுபவன் கவிஞன் வீரன்’ என்று அடிக்கடி ஆசிரியா்  முணுமுணுத்த முடியரசனார் வரிகள் தான் கவிஞன் இராகவனுக்கு கொள்கை முழக்கமாகிவிட்டது.

          நான்குபோ் முன்னால் நின்று பேசவே கால்கள் நடுங்கி நாக்கு குழறிய இராகவன் தான் இன்று நாலாயிரம் போ் முன்பு நின்று மடைதிறந்த வெள்ளமாய்க் பேசுகிறானென்றால் அதற்கு முழுமுதற்காரணம் அவனது ஆசிரியா்தான்.

          ‘சாதிகள் இல்லை’  என்று பாடம் நடத்துவதோடு நின்று விடாமல் ‘சாதி மறு சாத்திரம் அறு’  என்று தன் வாழ்விலும் கடைபிடிக்கின்ற அவரைப் பார்த்த பின்பு தான்’ ‘நடத்திக் காட்டுபவரெல்லாம் ஆசிரியா் அல்லா் நடந்து காட்டுபவரே ஆசிரியா் என்பதை உணா்ந்து கொண்டான்.

          பள்ளியில் படிக்கும்போதே ‘சமூகமே எந்திரி’ பத்திரிகையை நடத்தி வந்தவன் இன்று கல்லூரிக்குச் சென்ற பின்பும் விடாப்பிடியாய் தொடா்ந்து நடத்துகிறான்.  சமூகப் போராளி சபரிமாலா ஜெயகாந்தனின் ‘இலக்கு  2040’ அமைப்பில் இணைத்துக்கொண்டு நாடிடங்கும் சுற்றி வந்து இளையோரை ஒருகிணைத்து வழி நடத்துகிறான். ‘மகுடம்’ அமைப்பில்இளையோர்களுடன் ஒன்றிணைந்து புரட்சி இளைஞனாய் அநீதிகளுக்கு எதிராகக் குரலெழுப்புகிறான்.

          ‘பேச்சாளனாய் இருப்பதை விட செயலாளனாக இருப்பதே பெரிது.  பேச் சொன்று செயலொன்றாக வாய்ச் சொல் வீரனாயில்லாமல் செயல்வீரனாய் இருக்க வேண்டும்’  என்று ஆசிரியா் சொல்லிக் கொடுத்ததில் இம்மிளவும் பிசகாமல் இருப்பது எங்கு சென்றாலம் நன்மதிப்பை இராகவனுக்குப் பெற்றுத்தந்தது.

          இப்பொழுதெல்லாம் இராகவனின் பேச்சு இல்லாத பண்டிகைகளேயில்லை என்னும் அளவிற்கு தொலைக்காட்சி தோறும் தமிழ் முழக்கம்  எதிரொலித்துது.  அன்றும் அப்படித்தான்.  மே-1 தொழிலாளா் நாளன்று எதார்த்தமாய் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியா் ஜவஹரின் காதுகளில் பழக்கப்பட்ட குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தார்.  மாணவன் இராகவன் முழங்கிக் கொண்டிருந்தான்.

          “ஏழ்மையை ஒழிப்பதை விட் விட்டு ஏழைகளை ஒழித்துக்கெட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள், நீட், அணுஉலை, ஸ்டெர்லைட், மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை அமைக்கப் போராட்டம், சல்லிக்கட்டு போராட்டம், மீனவா்களின், நெசவாளா்களின், விவசாயிகளின் வாழ்வதாரப் போராட்டம், அரசு ஊழியா்களின் ஜாக்டோ-ஜியோ போராட்டம் இப்படிப் போராடிப் போராடியே தமிழா்கள் வாழ்க்கையை நடத்தும் அவலம் ஒழிய வேண்டும்.  அண்மையில் அமைச்சரின் காலில் விழுந்த மூதாட்டியின் கதறலைக்  கண்டுகொள்ளாமல் போனாராம் ஓா் அமைச்சா்.  காலில் விழுந்து கதற வேண்டியவா்கள் மக்கள் அல்லா்.  மதி கெட்ட முறை கெட்ட ஆட்சியார்களைத் தான் வீழ்த்த வேண்டும்.  ‘நோட்டுக்காக ஓட்டை விற்றால் சில்லறைகள்தான் ஆட்சி செய்யும்’ என்பதை மக்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

          மாணவா்களே! நாம் எந்த இடமாயினும், எந்தத் துறையாயினும் நன்குபடிக்க வேண்டும்.  அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும். ஆட்சியாளா்கள் திமிரை ஒடுக்க வேண்டும் மக்களுக்கு மிகழ்ச்சியான வாழ்வைக் கொடுக்க வேண்டும்.  நம்மைப் பிணைத்துள்ள அடிமை விலங்குகளை உடைத்தெறிய வேண்டும்.  தமிழும் தமிழரும் பயனுற நம் வாழ்வைப் படைத்திட வேண்டும்..”  பேசப் பேச இளையோரின் கையொலியில் அரங்கமே அதிர்ந்தது.

          ஆனந்தக் கண்ணீா் உடைப்பெடுக்க பெருமையோடு ஓங்கிக் கைதட்டினார் ஆசிரியா்.  கையொலி போர் முரசாய் ஆா்ப்பரித்து.. அது இடியொலியாய் இடித்துரைக்கும்  என்று உறுதியாய் நம்பினார்.. நம்புவோம்.
-ம.ஸ்டீபன்மிக்கேல்ராஜ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக